Saturday, March 29, 2014

ஜனாதிபதியின் உத்தரவை அடுத்து 77 மீனவர்கள் விடுதலை!

ஜனாதிபதியின் உத்தரவை அடுத்து 77 மீனவர்கள்  விடுதலை!



யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 58 இந்திய மீனவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டமை, தடை செய்யப்பட்ட வலை மற்றும் படகு வகைகளைப் பாவித்தமை  போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் அவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கைச் சிறைகளில் உள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுவிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விடுத்த உத்தரவின் தொடர் நடவடிக்கையாகவே இவர்கள் இன்று விடுவிக்கப்பட்டனர்.

இவர்களை விடுவிப்பதற்கான நீதிமன்ற உத்தரவை, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார்  வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு வழங்கினார்.

இதேவேளை - மன்னாரிலும் நேற்று   19 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்பட்ட 58 பேரும், மன்னாரில் விடுக்கப்பட்ட 19 பேரும் - இன்று சனிக்கிழமை, நாளை  ஞாயிற்றுக்கிழமை இந்தியா திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை - மன்னாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 21 இந்திய மீனவர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி திங்கட்கிழமை விடுவிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.

-எம்.ஜே,எம். தாஜுதீன்

No comments:

Post a Comment