Thursday, January 9, 2014

பேச்சுவார்த்தைக்கு முன் இலங்கை – இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை!

பேச்சுவார்த்தைக்கு முன் இலங்கை இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை!




இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு முன்பாக நல்லெண்ணம் கருதி இந்தியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இலங்கையில்  சிறைவைக்கப்பட்டுள்ள  தமிழக மீனவர்களையும் இலங்கை அரசாங்கம்  பொங்கள் தினத்துக்கு முன்னர் விடுவிக்கும் என இந்திய மத்திய அரசு ஆவலுடன் எதிர்பார்க்கிறது என்றும் கூறியுள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையை ஜனவரி மாதம் 20 ஆம் திகதி நடத்துவதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் உள்ளிட்ட 4 அமைச்சர்கள், நான்கு உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் 313  இந்திய மீனவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அதேபோல்,  200 இலங்கை மீனவர்கள் இந்தியச் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment