மனித உரிமையின் முக்கிய அம்சமான வாழும் உரிமை இலங்கை அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!
-பொது நலவாய உச்சி மாநாட்டில் ஜனாதிபதி உரை-
மனித உரிமையின் முக்கிய அம்சமான வாழும் உரிமை இலங்கை அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் 23 ஆவது உச்சி மாநாடு இன்று வெள்ளிக்கிழமை காலை 10.15 மணிக்கு கொழும்பு மஹிந்த ராஜபக்ஷ தாமரைத் தடாக அரங்கில் கோலாகமாக ஆரம்பமாகியது. இம்மாநாட்டில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
தாமரைத்தடாகம் கலை அரங்கிற்கு வருகைத்தந்த வெளிநாட்டு த்தலைவர்களையும் பிரதிநிதிகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , ஜனாதிபதியின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா அன்னாரின பாரியார் ஆகியோர் வரவேற்றனர்.
பாடசாலை மாணவ மாணவிகளினால் தேசிய கீதமும் வரவேற்பு கீதமும் இசைக்கப்பட்டதையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாநாட்டில் உரை நிகழ்த்தினார். இங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்-
பொது மக்கள் தான் எமது நாட்டின் பெறுமதிமிக்க சொத்து என்பதை மறந்து விட முடியாது. பொதுவான வறுமை பிரச்சினை குறித்து பொதுநலவாய அமைப்பு கவனம் செலுத்த வேண்டும்.
உணவு, குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளை குறைத்து மதித்து அரசியல் பிரச்சினைகளை பற்றி கவனம் செலுத்த முடியுமா?
2007ஆம் ஆண்டு 15.2 வீதமாகக் காணப்பட்ட நாட்டின் வறுமை யுத்தம் முடிந்துள்ள நிலையில் இன்று 6.5 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளின் இடைக்கால இலக்கை கடந்து இலங்கை பயணித்துக் கொண்டிருக்கின்றது.
யுத்தத்தின் பின்னர் நிலையான நல்லிணக்கம் மற்றும் சமரசத்தை நோக்கிச் நேர்மையான அணுகுமுறையில் நாடு சென்று கொண்டிருக்கின்றது.
நாட்டில் அனைத்து மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் அதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.
30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்தம் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பயங்கரவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
பொதுநலவாய மாநாட்டை தீர்ப்பு வழங்கும் அல்லது தண்டனை வழங்கும் அமைப்பாக பயன்படுத்தாது மக்களின் நலன்புரி மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ்,பொதுநலவாய அமைப்பின் தற்போதைய தலைவரும் அவுஸ்திரேலிய பிரதமருமான டொனி அயோட் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.
இம்மாநாட்டில் 53 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment